இந்திய திரைப்பட இசையின் சிகரம் இசைஞானி இளையராஜா, சினிமா இசையில் 50 ஆண்டுகள் கடந்த சாதனையை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சிறப்புப் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழா, ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ என்ற தலைப்பில் மகிழ்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, இந்திய சினிமா உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இளையராஜா, சமீபத்தில் லண்டனில் தனது ‘வேலியண்ட் சிம்பொனி’யை அரங்கேற்றம் செய்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இசைக்கு அவர் அளித்த அபார பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில், மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய பொன்விழா நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.
இலக்கியம், இசை, சினிமா மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த பலரும் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை பாராட்டி வருகின்றனர். அவரது இசை பயணம் தமிழர்களுக்கே பெருமை சேர்த்த நிகழ்வாகும்
Listen News!