1960-களில் வெளியான பிரபல திரைப்படமான “ரத்த திலகம்” படத்தின் மறுவடிவமே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அமரன்” திரைப்படம் என இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தற்பொழுது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அமரன் படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்தே படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராஜகுமாரன் தெரிவித்த கருத்துகள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஒரு பேட்டியின் போது பேசிய ராஜகுமாரன், “1960 களில் வந்த ‘ரத்த திலகம்’ படத்தின் மறுவடிவம் தான் அமரன்.இந்தப் படத்தில ஒரு விஷயம் கூட புதுசா இல்ல. ஆரம்பத்த்திலேயே ஹீரோ இறந்திடுவார்னு தெரிஞ்சும் குடும்பம் குடும்பமாக போய் பாக்குறீங்கன்னா உங்க மனநிலை என்ன? அந்தப் படத்தில இருந்த ஒரே ஒரு நல்ல விஷயம் சாய் பல்லவி மட்டும் தான். அவங்களை விதவிதமா ரசிச்சுப் பார்க்கத் தான் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக போனாங்க. " என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து, அமரன் படத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதையின் முடிவு முன்கூட்டியே தெரிந்திருந்தாலும், உணர்ச்சிபூர்வமான திரைக்கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்காகவே படம் பார்க்கப்படுகிறது என ரசிகர்கள் தரப்பில் பதில்கள் வெளியாகி வருகின்றன.
Listen News!