நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜயின் இறுதி திரைப்படமான ஜனநாயகன் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகளும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றதாக கூறி தணிக்கை வாரியம் சான்றிதழை மறுத்து மறுஆய்வு குழுவிடம் பரிந்துரைத்தது.
இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றபோது தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் தலைமை நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்தார்.

இதனால் வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்று மறுஆய்வு குழு பரிசீலனையில் இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இன்னொரு பக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து, தணிக்கை குழுவினர் ஏப்ரல் 24ஆம் தேதி படத்தை பார்த்தனர். தங்களது இறுதி முடிவை இன்று திங்கட்கிழமை தெரிவிப்பதாக தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இன்று தணிக்கை வாரியம் இன்று தனது முடிவை தெரிவிக்கும் பட்சத்தில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இன்றைய முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Listen News!