தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். அவருடைய திடீர் மரணம் தமிழ் திரையுலகத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் தொடர்புடைய பல்வேறு சிக்கல்கள் இருந்ததாக கூறப்பட்டது.
"வெற்றி என்பது ஒருபோதும் நிலைத்திராதது; ஆனால் முயற்சி நிலைத்திருக்க வேண்டும்" என்பதற்கேற்ப, தனது உடல்நலப் பிரச்சனைகளையும் தாண்டி திரைத்துறையில் பிஸியாக இருந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவருடைய நிலைமை கடுமையாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு குறித்து திரையுலகமே இரங்கல் தெரிவித்துவருகிறது. சிறிய ஸ்கிரீனில் ‘கலக்கப்போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றார். பின்னர், தமிழ் சினிமாவில் பல பிரபலமான படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து பிரபலங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் நேரில் வந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, நடிகர் கார்த்தி, "தீமை தரும் தேர்வுகள் எப்படி காலப்போக்கில் உடல்நிலையை அழிக்கிறது என்பதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நடிகர் சிம்பு "ரோபோ சங்கர் இறந்த செய்தி கேட்டதும் மிகுந்த வருத்தமடைந்தேன் என தனது x தளத்திலும் கூறியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி, தனுஷ் , பாடலாசிரியர் சினேகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எனப் பலரும் தங்களது இரங்கலை நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.
ரோபோ சங்கரின் உடல் தற்போது அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கான பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரசிகர்கள், பொது மக்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Listen News!