மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடன் செல்பி எடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சூரி, “இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்த நாள். நாங்கள் இரட்டையர்கள். ராமன்-லட்சுமணன் போல, நான் ராமனாக பிறந்தேன். பெயர் சூரி ஆகிவிட்டது. என் வாழ்வில் முன்னேற காரணம் எனது அண்ணன், தம்பிகள்,” எனக் கூறினார்.
தற்போது ‘மாமன்’ திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், அடுத்ததாக ‘மண்டாடி’ என்ற கடல் வீர விளையாட்டு (போட் ரேசிங்) அடிப்படையிலான படம் நடிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இப்போதெல்லாம் திரையுலகில் காமெடி நடிகர்கள் குறைந்து விட்டனர். ஆனாலும் காமெடி நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கொடுத்ததுபோல், மற்றவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்,” என்றார்.
அரசியல் தொடர்பான கேள்விகளில் அதிகம் பேச விரும்பாத சூரி, “அனைவரும் அனைவரையும் மதிக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு போனது அவரது விருப்பம். அவரை எனக்கும் பிடிக்கும்,” என்றார்.
Listen News!