பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், ஆரம்பத்திலிருந்தே நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்த அவர், விஜய்யின் அரசியல் பயணத்தை பல்வேறு கோணங்களில் எதிர்த்து கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை விமர்சனங்களை முன்வைத்த சேரன் கூட தற்போது தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு, விஜய்க்கு மனமுவந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “முதல் தேர்தலிலேயே மக்களின் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் அவர்களுக்கு, திரையுலகைச் சேர்ந்த ஒருவராக மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி, தமிழ்நாட்டில் ஒரு புதிய சுதந்திரக் காற்றை வீச வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாம் இதுவரை சில கட்சிகளின் பிடியில் சிக்கி தவித்தோம். அந்த நிலைமையிலிருந்து மக்களை விடுவித்ததற்கு நன்றி. அதுவே எங்களது நோக்கமும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வருங்கால தலைமுறைக்கு தேவையான மாற்றங்களை உங்கள் ஆட்சி கொண்டு வரும் என நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேர்தலுக்கு முன்பு விஜய்யை விமர்சித்ததற்காக வருந்துவதாகவும், தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் சேரன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நிலைப்பாடு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!