தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை (மே 7) தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தவெக சார்பில் ஏற்கனவே ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், முழுமையான விவரங்கள் ஆளுனர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இன்று ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் மே 7ஆம் தேதி பதவியேற்பு விழா வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விஜய் நாளை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. இதற்கான ஏற்பாடாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், அமைச்சரவை பட்டியல் தொடர்பான ஆலோசனைகளும் கட்சிக்குள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெற்றி பெற்ற 108 சட்டமன்ற உறுப்பினர்கள் பனையூர் தலைமையகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பின்னர், சில உறுப்பினர்கள் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், “விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இந்தத் தேர்தல் தீர்ப்பு, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவானது” என தெரிவித்துள்ளார்.
Listen News!