• Jun 21 2024

விசுவாசம் மிக்க கருடனாக ஜெயித்தாரா சூரி? இதோ விமர்சனம்..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக படிப்படியாக முன்னேறிய நடிகர் சூரி, விடுதலை படத்துக்கு பிறகு புதிய அவதார நாயகனாக மாறியுள்ளார். தற்போது அவர் நடித்த கருடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. எனவே கருடன் படத்தில் அவரது நடிப்பு எப்படி? அவர்  ஜெயித்துக் காட்டினாரா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் துரோகம், நியாயம், அன்பு, நட்பு, விசுவாசம் இவற்றை மையப்படுத்தி நகரும் கோலிவுட் படத்தின்  மற்றும் ஒரு கதை. சிறு வயது முதல் நட்புக்கு இலக்கணமாக பழகும் சசிகுமார் உன்னி முகுந்தன் ஆகிய இருவரின் வாழ்க்கையில் சொக்கன் எனப்படும் சூரி வந்து சேர்கிறார். ஊர் பேர் தெரியாமல் அடைக்கலம் இல்லாமல் வாழ்ந்த தனக்கு உணவளித்து தத்தெடுத்த உன்னி முகுந்தனின் வலது கரம் ஆவதுடன், நாயையும் விட நன்றி உடையவர் ஆகவும் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் நபராகவும் மாறி அவர்கள் இருவரையும் காக்கின்றார் சூரி.

தேனி மாவட்டத்தில் லாரி பிசினஸ், செங்கல் சூளை, கோயில் சொத்தை பராமரிப்பது என குடும்பமாக ஊரில் முக்கிய புள்ளிகளாக திகழும் இவர்களது வாழ்வில், சென்னையில் இருக்கும் கோயில் நிலம் ஒன்றின் பத்திரத்தால் பிரச்சனை வருகிறது. ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் உயர் அதிகாரியாக சமுத்திரக்கனி மூலம் அமைச்சரான இயக்குனர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஆரம்பிக்கின்றது. இவற்றுக்கு மத்தியில் சசிகுமாரன், உன்னி முகுந்தன், சூரி இவர்களது உறவு என்ன ஆனது என்பதை கமர்சியல் அம்சங்களுடன் சேர்ந்த கேரக்டரில் சிறப்பாக நடிப்புடன் சொல்லி இருக்கின்றார்கள்.


இந்த படத்தில் சொக்கனாக படத்தின் நாயகன் நடிகர் சூரி, முகுந்தன் மீது அதீத அன்பு கொண்ட ஒரு அடிமையாகவும், இரண்டாவது பாதியில் கதை நாயகனாகவும் மாஸ் காட்டியுள்ளார். உன்னி முகுந்தன், சசிகுமார் நட்பின் இலக்கணம் என்றாலும் உன்னி முகுந்தன் மீது சசிக்குமாரையே கை வைக்க விடாமல் தடுப்பதும், அன்புக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருப்பதும், அதே பாசத்தால் ஒரு கட்டத்தில் அடிமை நிலையிலிருந்து மாறி நாயகனாக மாறுவது என சூரியின் நடிப்பு பிரமிக்க வைத்துள்ளது. 

இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க வியாபித்து சம்பவம் செய்துள்ளார் சூரி. இந்த கதையில் நாயகனாகவும் அதே நேரத்தில்  காமெடி வேண்டிய இடங்களில் சிரிக்க வைத்தும் ரசிகர்களை கட்டி போட வைத்துள்ளார் சூரி.

ஆனாலும் சூரியை  தவிர ஏனைய கதாபாத்திரங்களில்  விறுவிறுப்பு இல்லை என்றே சொல்லலாம். சூதாட்டம், போதை தாண்டி உன்னி முகுந்தனின் கேரக்டருக்கு இன்னும் வலுவான காரணம் சேர்த்து இருக்கலாம். எனினும் மொத்தத்தில் விசுவாசம் மிக்க கருடனை தியேட்டரில் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

Advertisement

Advertisement