• Sep 21 2024

"வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிரம் பேசுவாங்க"… ரக்ஷிதாவுடனான பிரிவு குறித்துப் பேசிய தினேஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியலின் மூலமாக 2011-ஆம் ஆண்டு சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரக்ஷிதா. இந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்திருந்தவர் தினேஷ். இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். அன்று தொடக்கம் இன்றுவரை சிறந்த தம்பதியினருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினர் சமீபத்தில் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இந்த நிலையில் தினேஷ் அவர்கள் ரக்ஷிதாவுடனான பிரிவு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார். இதில் அவர் கூறுகையில் "எது சரி எது தப்பு என்று ரக்ஷிதாவிற்கு நல்லாவே தெரியும், அதே போலவே வேலை என்று வந்துவிட்டால் அதிலேயே அவங்க நிறைய கவனம் செலுத்த தொடங்கி விடுவாங்க, இதற்கு நடுவில யார் வந்தாலும் கணக்கிலேயே எடுக்க மாட்டாங்க, அந்தளவிற்கு வேர்க் விஷயத்தில அவங்க ஸ்ட்ரோங் ஆக இருந்தாங்க, அதனால அவங்க அதையே பின்தொடர்ந்து போயிட்டு இருக்காங்க, அதற்கு என்னால ஈடு கொடுத்துப் போக முடியலையோ என்னவோ எனக்குத் தெரியல" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில் "இதற்கான சரியான பாடத்தைக் காலமும் நேரமும் தான் பெற்றுக் கொடுக்கும், அந்த டைமில் தான் நாங்க இப்போ இருக்கோம் என்று நினைக்கிறேன், இதற்கு ஒரு நல்ல டைம் வந்து எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கோம்" எனவும் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமன்றி மீடியாக்களில் உங்களை பற்றி வருகின்ற செய்திகளை பார்க்கும் போது எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு "காமெடியாக இருக்கின்றது எனவும், இன்னும் இவங்க எல்லாம் திருந்தலையா என்று தோணுகிறது" எனப் பதிலளித்திருக்கின்றார். மேலும் "வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி அவன் அவன் ஆயிரம் பேசுவாங்க, நாம சும்மா இருந்தாலும் ஏதாவது சொல்லுவாங்க, நம்மள பற்றி ஏதாவது பேசிட்டு இருக்காங்க அதனால அவங்களுக்கு எதாவது பிரயோசனம் என்றால் சரி பேசட்டும், ஒருத்தன் என்னை கெட்டவன் என்று சொல்லுறதால நான் கெட்டவன் ஆகிட முடியாது. நான் கெடடவனா நல்லவனா என்பது என்கூட பழகிறவங்களுக்குத் தெரியும்" எனவும் கூறியிருக்கின்றார்.

மேலும் ரக்ஷிதா பற்றிக் கூறுகையில் "சரவணன் மீனாட்சி நடிக்கும் போது கூட அவங்கள நிறைய பேர் ஹெர்ட் பண்ணி இருந்தாங்க. அதைக்கூடி அவங்க தைரியமாக கடந்து வந்தாங்க. அதுக்கு அப்புறமாக கூடி அவங்க 4,5 அவார்ட் வாங்கி இருந்தாங்க. இது எல்லாம் நான் அவங்களப் பார்த்துக் கத்துக்கிட்டது தான்" எனவும் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது "எங்க அப்பா, அண்ணா கூடி அப்பிடித்தான். எல்லாத்தையும் ஈஸியாக கடந்து வருவாங்க. இதனால என்னாலயும் எல்லாத்தயும் கடந்து வர முடிகின்றது. இவங்க எல்லாருமே எனக்கு கிடைச்ச ஹிவ்ட்" எனவும் கூறியிருக்கார்.

மேலும் "வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கு, கோபப்படாதவன் மனிதனும் இல்லை. கோபப்பட்டு நிறைய இழந்த அனுபவத்தினால் நான் இப்போது அமைதியாக இருக்கின்றேன். சோசியல் மீடியாக்கள் அனைத்தும் தங்களுக்குத் தெரிஞ்சதை உண்மையோ பொய்யோ போடுறாங்க. இதற்காக நாங்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திட்டு இருக்க முடியாது. தப்பான கமெண்ட் போடுறவங்க முதலில அவங்க சிந்திக்கணும், அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதை வைத்து செய்திகளை பரப்ப கூடாது. அந்த செவி வழி செய்தியை வைத்து ஒருவரை பற்றி தப்பாக முடிவெடுக்கக் கூடாது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு பொதுவான ஒரு விடயம் அவர் கூறுகையில் "முதலில நடிப்புத் திறமை இருக்குதோ இல்லையோ என்பதை தாண்டி எதையுமே தாங்க கூடிய மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார். எனவே தினேஷின் இந்தக் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவர்களின் பிரிவு நிரந்தரம் இல்லை என்பதும், கூடிய சீக்கிரமே அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பதும் தெரிய வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement