இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாடல்களாலும், இசையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்தாண்டு இவரது இசையில் வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா, இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு ஆகிய அனைத்து படங்களின் பாடல்களுக்கும், இசைக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த ஆண்டும் இவர் கைவசம் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, லால் சலாம் போன்ற படங்கள் உள்ளன. இதில் பத்து தல படம் வருகிற மார்ச் 30- ஆந் தேதியும், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ளது.
சமீபத்தில் வெளியான பத்து தல படத்தின் நம்ம சத்தம் என்கிற பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.இப்படி படங்களில் பிசியாக இருந்தாலும் இசை நிகழ்ச்சி நடத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். அண்மையில் கூட மலேசியாவில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாடுகளில் தான் ஏ.ஆர்.ரகுமான் அதிகளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
சென்னையில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தாதது ஏன் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது. இந்த ஆதங்கத்தில் தீவிர ரசிகர் ஒருவர் டுவிட்டரில், சார் சென்னைனு ஒரு சிட்டி இருக்கு உங்களுக்கு நியாபகம் இருக்கா என சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாதது குறித்து சூசகமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், அனுமதி கிடைப்பதற்கு ஆறு மாத காலம் ஆகும் என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைப்பது இவ்ளோ கஷ்டமா என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். சிலரோ உங்களின் ரசிகர்களுக்காக 6 மாதம் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கக்கூடாதா என வேண்டுகோள் விடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.இந்த வேண்டுகோள் தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!