சமூகத்தில் நிலவும் ஜாதி பாகுபாடுகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் கூறிய வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
“இன்னமும் கிராமங்களில் ‘நீ கீழ, நான் மேல’ என்ற மனப்போக்கு நிலவி வருகிறது. ஆனால் முன்னேற வேண்டும் என்றால் அந்த எண்ணங்களை தள்ளி வைத்து, கல்வி மற்றும் தனி முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் எப்படி படிக்கிறார், எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் என்பதுதான் முக்கியம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “உழைப்பும் முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். வெற்றி வந்தவுடன், உங்கள் ஜாதியை யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால், ‘நான் இந்த ஜாதி, என்னை ஒதுக்குகிறார்கள்’ என்று குறை சொல்லாமல், உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிலருக்கு வெற்றி ஒரு வருடத்தில் கிடைக்கலாம்; சிலருக்கு அது 10 வருடங்கள் ஆகலாம். ஆனால் நேரம் எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி உறுதி." என்ற அவரது கருத்து, இளைஞர்களிடையே பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதன் பின்னர், பலரும் அதை ஆதரித்து பகிர்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளை மீறி முன்னேற வேண்டும் என்ற உறுதியை இந்த உரை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Listen News!