நடிகை மீனா நடித்த ‘பாளையத்து அம்மன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, அம்மன் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது, அந்த வேடத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அம்மன் கதாபாத்திரத்திற்கு நேரடி ரெஃபரன்ஸ் எதுவும் இல்லாததால், இதற்கு முன்பு இப்படியான வேடங்களில் நடித்த நடிகைகளின் உடல் மொழி, அவர்கள் பேசும் விதம் மற்றும் அசைவுகளை கவனித்து, அதனுடன் தனது தனித்துவமான பாணியையும் இணைத்து நடித்ததாக மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் பல்வேறு தோற்றங்களில் நடித்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். பச்சை நிற மேக்கப்பில் பாளையத்து அம்மனாகவும், கருப்பு நிற மேக்கப்பில் கருமாரி அம்மன் போன்ற ஒரு தோற்றத்திலும், மஞ்சள் நிற மேக்கப்பில் பாரம்பரிய அம்மன் வேடத்திலும் நடித்த அனுபவம் அவருக்கு புதிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அம்மனாக நடிக்கும் போது, பேசும் விதம், நடக்கும் நடை, சிரிப்பு ஆகிய அனைத்தும் தெய்வீகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் ஆழ்ந்து யோசித்து நடித்தது, அந்த வேடத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க உதவியதாகவும் மீனா பகிர்ந்துள்ளார்.
Listen News!