தமிழ் சினிமாவில் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றார். தனது சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோதே, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்பட உலகை விட்டு விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
இந்தநிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன்போது அவர் பேசுகையில்,
ஒன்னு கவனிச்சீங்களா மக்களே... நம்ம ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு விஷயம் நடந்துகிட்டு இருக்கு. முன்னாடி சட்டசபையில யார் பேசினா நமக்கு என்ன, யார் அடிச்சுக்கிட்டா நமக்கு என்னன்னு இருந்த கூட்டம்லாம், இப்போ சட்டசபையில என்ன நடக்குது, என்ன பேசுறாங்கன்னு ரொம்ப உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

திமுக ஸ்டைல்லயே சொல்லணும்னா, ரீல்ஸ் போட்ட கூட்டம்லாம் இப்போ நியூஸ் பாத்துக்கிட்டு இருக்காங்க. அதுல நமக்கு சந்தோஷம்தான், பெருமைதான். நம்ம இளைஞர்கள், நம்ம பெண்கள் அரசியல் என்னன்னு தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்னு ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு. இதெல்லாம் யாரால நடந்திருக்குன்னு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.
மேலும், தற்குறி, தற்குறின்னு மக்களை சொன்னீங்களே... அவங்கதான் உங்களோட அரசியல் வாழ்க்கையையே ஒரு கேள்விக்குறி ஆக்கி இருக்காங்க. இன்னும் ஆக்கப் போறாங்க. நான் அன்னைக்கே சொன்னேன். அப்போ சிரிச்சவங்க இப்போ என்ன பண்ணப் போறாங்களோ தெரியல. உண்மையை சொன்னா அந்த கூட்டத்துக்கு கசக்குதே தவிர வேற எதுவும் இல்ல.

உண்மையிலேயே மக்கள் மனசை புரிஞ்சு வச்சிருந்தீங்கன்னா, மக்களை இப்படி தப்பா பேசியிருக்க மாட்டீங்க எனவும் குறிப்பிட்டார்.
இதனுடன், தன் இதயத்தோடு நெருக்கமாக வாழும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய், மக்களுக்கான மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை உருவாக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
விஜய்யின் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!