தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை திரிஷா. பல தலைமுறை ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது கூட பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திரிஷாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னொரு பக்கம், நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய காலத்திலிருந்து, அவரையும் திரிஷாவையும் தொடர்புபடுத்தி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
குறிப்பாக சில புகைப்படங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட சம்பவங்கள் இணையத்தில் அதிகம் பேசப்பட்டன. சமீபத்தில் நடிகர் அஜித்தின் தாயார் மறைவிற்கு இருவரும் ஒன்றாகச் சென்று அஞ்சலி செலுத்திய நிகழ்வும் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாயின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனுடன், "என் விஷயங்களில் மூக்கை நுழைக்க நான் அனுமதிப்பது இந்த மூக்குக்கு மட்டும்தான்" என்ற நகைச்சுவையான வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து பரவி வரும் வதந்திகளுக்கு திரிஷா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், "ஒரே பதிவில் அனைத்து வதந்திகளுக்கும் பதில் கொடுத்துவிட்டார்", என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். திரிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் பதிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Listen News!