தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருள் மற்றும் மதுவால் ஏற்படும் சமூக பிரச்சினைகளை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்த சில டாஸ்மாக் கடைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 81 மதுக்கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோவையிலும் ஒரு டாஸ்மாக் கடை அகற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இந்த நடவடிக்கையை வரவேற்று வருகின்றனர்.
இது குறித்து பேசிய பெண்கள், “இரவு நேரங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுஇடங்களில் குடிபோதையில் சிலர் தொந்தரவு கொடுப்பது வழக்கமாக இருந்தது. பெண்கள் தனியாக பயணம் செய்யவே பயமாக இருந்தது. தற்போது கடை அகற்றப்பட்டதால் பாதுகாப்பாக உணர்கிறோம்” என தெரிவித்தனர்.

மேலும் சிலர், “குடிபோதையில் சிலர் பேருந்துகளில் ஏறி பெண்கள் அருகில் அமர்ந்து பிரச்சினை செய்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இப்போது அந்த அச்சம் குறைந்துள்ளது” என்றும் கூறினர்.
பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேசுகையில், “பஸ் ஸ்டாண்டுகளின் அருகே இருந்த டாஸ்மாக் கடைகளால் இரவு நேரங்களில் பிரச்சினைகள் அதிகமாக இருந்தது. தற்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு நல்ல மாற்றத்தை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பு, பெண்களின் நிம்மதி மற்றும் சமூக ஒழுங்கை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பெண்கள், “இது பெண்களின் பாதுகாப்புக்கான முக்கியமான ஆரம்பம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!