தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர் மற்றும் அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி என்பதாலேயே ‘அரசன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கிடையில் படத்தின் படப்பிடிப்பு குறித்த பல சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சிம்புவைப் பற்றி பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அவர் கூறுகையில், முதலில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த படத்திற்காக சிம்பு தலைமுடியை வளர்த்து வந்ததாகவும், ஆனால் வெற்றிமாறன் கூறிய ‘அரசன்’ கதையை கேட்டதும் அந்தப் படத்தை தள்ளிவைத்து உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், சிம்பு ஒருபோதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததில்லை. மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுவார். ஆனால் இன்னும் சிலர் அவர் தாமதமாக வருகிறார் என்று விமர்சிப்பது ஏன் என்று தெரியவில்லை எனவும் கூறினார்.
இந்த நிலையில், சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறிய குழந்தை ஒன்றுடன் கொஞ்சி விளையாடும் சிம்பு, “யார் பெத்த பிள்ளையோ தெரியல...” என்று செல்லமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திரையில் மாஸ் ஹீரோவாக ரசிகர்களை கவரும் சிம்புவின் இந்த எளிமையான, பாசமான முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!