90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஜா செல்வமணி. 1992ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.
2000களுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பை குறைத்த ரோஜா, அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். சமீபத்தில் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிலும் கவனம் பெற்றார்.
இந்த நிலையில், தற்போது ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா செல்வமணி பெற்றுள்ள கல்வி சாதனை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அமெரிக்காவில் உள்ள Luddy School of Informatics, Computing and Engineering கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் படித்து வந்த அன்ஷு மாலிகா, சமீபத்தில் Indiana University Bloomington வழங்கும் மிக உயரிய Herman B Wells விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய மாணவி என்ற பெருமையையும் அன்ஷு மாலிகா பெற்றுள்ளார். கல்வி திறமை மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக வழங்கப்படும் இந்த விருது, தற்போது இந்தியர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, அன்ஷு மாலிகா “Highest Distinction” என்ற உயரிய சிறப்புடன் தனது பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை ரோஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில், “இந்த மதர்ஸ் டே என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. என் மகள் அன்ஷு மாலிகா உயரிய சிறப்புடன் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தாயாக இதைவிட பெரிய பரிசு வேறு எதுவும் இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும் ஆந்திரப் பிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக பணியாற்றிய ரோஜாவுக்கு, தற்போது மகளின் இந்த சர்வதேச கல்விச் சாதனை மிகப்பெரிய பெருமையாக மாறியுள்ளது. ரசிகர்களும் ரோஜாவுக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!