சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் பகிர்ந்த அனுபவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், “நான் முதன்முதலாக குருதேவின் ஆச்சிரமத்திற்கு சென்றபோது, இரண்டு நாட்கள் மட்டும் தங்கிவிட்டு திரும்பிவர வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த இடத்தின் அமைதி, இயற்கை சூழல், அங்கிருந்த மக்களின் அன்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்ததால் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன்.” என்று கூறினார்.

மேலும் ஆச்சிரமத்தில் இருந்த அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், “அங்கு பெரிய ஏரி, குதிரைகள், நூற்றுக்கணக்கான மாடுகள் என எல்லாமே மனதிற்கு அமைதியளிக்கும் வகையில் இருந்தது. அதில் ஒரு குதிரையின் பெயர் கூட ‘ரஜினி’ என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.” என நகைச்சுவையாக பகிர்ந்தார்.
அதன்பிறகு நடந்த ஒரு சம்பவத்தை கூறிய அவர், “ஒருநாள் குருதேவ் என்னை பக்தர்களைச் சந்திக்க வரச் சொன்னார். நான் சென்றால் மக்கள் புகைப்படம், ஆட்டோகிராப் கேட்பார்கள் என்று தயங்கினேன். ஆனால் அவர் கட்டாயம் வர வேண்டும் என்றார். நான் அங்கு சென்றபோது, யாரும் என்னை திரும்பிப் பார்க்கவே இல்லை. பார்த்தவர்களும் எந்தவித ஆர்வமும் காட்டவில்லை.” என்று சிரித்தபடி தெரிவித்தார்.
இதையடுத்து, “அன்றுதான் சினிமா புகழை விட ஆன்மிகத்தின் சக்தி மிகப்பெரியது என்பதை உணர்ந்தேன்.” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!