கன்னட நடிகர் ரிஷப் செட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அங்கு ரிஷப் செட்டியின் நடிப்பையும், அவர் நடித்த தெய்வக் கதாபாத்திரத்தையும் கேலி செய்யும் வகையில் சில சைகைகள் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இதையடுத்து, அந்த தெய்வத்தை வழிபடும் பக்தர்கள் ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அவர் பொதுவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் ரன்வீர் சிங் சமூக வலைத்தளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டார். ஆனால், கோயிலுக்கு நேரில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்தது.
இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரன்வீர் சிங், மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து மன்னிப்பு கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சில இந்து அமைப்புகள், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ரன்வீர் சிங் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத நல்லிணக்கத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ரன்வீர் சிங் கோயிலுக்கு நேரில் சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டதுடன், அம்மன் சன்னதியில் வழிபட்டு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. கோயிலில் அவர் வழிபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துகொண்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
Listen News!