சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் குறித்து நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அவர் கூறுகையில், “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட கொடூர செயல்களுக்கு ஒரு பயம் உருவாகும்,” என்றார்.

மேலும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் பகிரும் நபர்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார். “மற்ற பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் முன், தங்கள் வீட்டில் இருக்கும் தாய், மனைவி, அக்கா, தங்கை ஆகியோரின் முகங்களை இப்படிச் செய்து பார்க்கட்டும். அப்போது தான் அந்த வேதனை என்ன என்பதை உணர்வார்கள்,” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
அதோடு, யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆதாரமில்லாமல் குடும்ப விவகாரங்களில் தலையிட்டு அவதூறு பரப்பும் சிலரையும் அவர் சாடினார். “பணத்திற்காக மற்றவர்களின் குடும்பத்தை பாதிக்கும் வகையில் பேசுவது மிகவும் தவறு. சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.
நடிகை குஷ்புவின் இந்த கருத்துகள் பலரிடமும் ஆதரவை பெற்றுள்ளதுடன், பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!