தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், “விஜய் 1974-ல் பிறந்த போது நான் ஒரு உதவி இயக்குநராக இருந்தேன். குடும்பத்துக்கு உணவு கூட கஷ்டப்பட்டு சம்பாதித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.
மேலும், இது என் கனவு. அந்த கனவை என் மகன் இன்று நிறைவேற்றியிருக்கிறார். விஜய் சொன்னதை எப்போதும் செய்து முடிப்பார். செய்ய முடியாததை அவர் பேசவே மாட்டார். சிறு வயதிலிருந்தே அந்த குணம் அவருக்கு இருக்கிறது.'' என்றார்.
விஜயின் அண்ணி மகள் பல்லவி, “இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான மற்றும் பெருமையான தருணம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், த.வெ.க. எம்.எல்.ஏ மரியா வில்சன், “தமிழக மக்களின் மகனாகவும் சகோதரராகவும் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றிருப்பதை பார்த்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக மக்கள் காத்திருந்த தருணம் இது,” என்றார்.
அதேநேரத்தில், “விஜய் முதல்வராக முடியாது என்று பலர் கூறினார்கள். ஆனால் அது இன்று நிஜமாகியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பேசிய விஜய், “நான் அரசியல் பின்னணியில் பிறந்தவன் அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். உதவி இயக்குநரின் மகனாக பசி, வறுமை என்ன என்பதைக் கண்ணால் பார்த்தவன்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
“நான் உங்களுள் ஒருவன். உங்கள் மகன், சகோதரன் போலவே என்னை நினைத்ததால்தான் இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள்,” என்றும் விஜய் கூறியுள்ளார்.
மேலும், வெளிப்படையான நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நல ஆட்சி மற்றும் ஊழலற்ற அரசை வழங்குவேன் என உறுதியளித்த அவர், தமக்கு நம்பிக்கை கொடுத்த மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
Listen News!