'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள புதிய படம் ‘பாலன் தி பாய்’ தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து உருவான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் அபார வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது அந்தப் படத்தின் வெற்றியை நிரூபித்தது. இந்த நிலையில், சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான 'பாலன் தி பாய்' ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸ், ஜித்து மாதவன் மற்றும் சிதம்பரம் இணைந்து தயாரித்துள்ளனர். ‘பாலன் தி பாய்’ திரைப்படம் உணர்ச்சி, நட்பு, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் இளைஞர்களின் மனநிலையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வெற்றிக்குப் பிறகு சிதம்பரம் எந்த வகை கதையை தேர்வு செய்திருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. அதனால் இந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவிலும் கவனம் பெறக்கூடிய படமாக இது அமையும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
Listen News!