தமிழ் சினிமாவில் இசை, எழுத்து மற்றும் இயக்கம் எனப் பல்வேறு துறைகளில் தன்னுடைய தனித்துவத்தை காட்டியவர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன். சமீபத்தில் அவரும், பின்னணி பாடகி சின்மயியும் பங்கேற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சி மிகவும் உணர்வுபூர்வமான பரிமாற்றங்களுக்கு மேடையாக அமைந்தது.
அந்த பேட்டியில், சின்மயியின் வாழ்க்கை, அவருக்கு நேர்ந்த அவமதிப்பு, தொழில்நுட்ப தடை மற்றும் சமுதாய அநீதிக்கு எதிரான குரல் ஆகிய அனைத்தையும் கங்கை அமரன் நேர்மையாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். அவருடைய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த நேர்காணலில் கங்கை அமரன், “சின்மயி வாழ்க்கையில் பட்ட கஷ்டம், பின்னணி பாடகியாக வாறதுக்குப் பட்ட கஷ்டம், அதுக்குப் பிறகு நடந்த அசிங்கம்... அந்த சூழ்நிலையில் கூட சின்மயி யாரோட உதவிக்கும் போகல.” எனத் தெரிவித்திருந்தார்.
அவர் இந்த வார்த்தைகளை சொல்லும் விதமே, சின்மயியின் நேர்மைக்கும், தைரியத்திற்கும் அவர் கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்துகிறது. சினிமா துறையில் எந்தவிதமான துணையும் இல்லாமல் தனது நியாயத்துக்காக மட்டுமே நின்ற சின்மயியின் நிலைப்பாட்டை புகழ்ந்தார் கங்கை அமரன்.
கங்கை அமரன் மேலும், “ஒரு பொண்ணு நியாயம் பேசுறாங்கன்னா, அவளுக்கு சப்போர்ட் பண்ணவும் நான் ரெடியா இருக்கேன்.”எனவும் கூறியிருந்தார். இந்த பேட்டியின் போது கங்கை அமரன் நேராக வைரமுத்து பற்றியும் பேசியுள்ளார். “வைரமுத்து என்னுடைய நண்பர் தான். அதற்காக அவர் செய்யுற தவறை நான் கேட்காம இருக்க முடியுமா?” எனவும் தெரிவித்தார்.
பேட்டியின் முடிவில் கங்கை அமரன், “சின்மயிக்கு நடந்தது ஒரு பெண்ணுக்கும் நடக்கவே கூடாத விஷயம். யாருக்கும் இப்படி ஒன்று நடக்ககூடாது.” என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த பேட்டிக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கங்கை அமரனுக்கு மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!