தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பாலும், அதிரடி கதாபாத்திரங்களாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன். ஆக்சன் கிங் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த அர்ஜுனின் தாய்மொழி கன்னடம் என்றாலும், தமிழ் சினிமா மீது இருந்த அதிக ஈர்ப்பின் காரணமாகவே சென்னை வந்து சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை சந்தித்த அவர், பின்னர் அதிரடி கதைகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போலவே ஆரம்பத்திலிருந்தே ஆக்சன் கதைகளில் அதிகம் நடித்த நடிகர்களில் அர்ஜுனும் ஒருவர். போலீஸ் அதிகாரி, ராணுவ வீரர், தேசபக்தன் போன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், குருதிப்புனல் போன்ற படங்கள் அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தன. அதிலும் தேசபக்தி கலந்த கதைகளில் அவர் நடித்த விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஒரு கட்டத்தில், பிறர் இயக்கத்தில் மட்டும் நடிக்காமல், தானே படங்களை தயாரித்து இயக்கியும் நடித்தார். அவரின் படங்களில் சண்டைக் காட்சிகள் மிகவும் இயல்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். “அர்ஜுன் படம்” என்றாலே அதில் தரமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்வார்கள். அந்த எதிர்பார்ப்பை அர்ஜுனும் ஒருபோதும் குறைக்கவில்லை.
சினிமாவைத் தாண்டியும், உடற்பயிற்சி மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்தும் நடிகர்களில் அர்ஜுன் முக்கியமானவர். 60 வயதை கடந்த பிறகும் அவரது உடல் கட்டும், ஆக்சன் திறமையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னோட பேர் அர்ஜுன் கிடையாது என தன்னுடைய உண்மையான பெயரை தெரிவித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், என்னோட பேர் அர்ஜுன் கிடையாது, என்னோட உண்மையான பேர் ஸ்ரீனிவாஸ். ஸ்கூல் காலேஜ்ல அசோக்னு கூப்பிடுவாங்க என்னோட நண்பர்கள் எல்லாரும் அசோக்னு தான் கூப்பிடுவாங்க, வீட்ல சீனுனு கூப்பிடுவாங்க.
என்னோட முதல் படத்துல என்னோட கேரக்டர் பேர் 'அர்ஜுன்' இந்த பேர் உங்களுக்கு நல்லா சூட் ஆகுது, இந்த பேரே வெச்சிக்கோங்கனு டைரக்டர் சொன்னாரு. ஆரம்பத்துல அர்ஜுன் சொன்னா வேற யாரையோ கூப்பிடுறாங்கனு நினைப்பேன், அப்றம் அது பழகி போயிடுச்சு என்று தெரிவித்துள்ளார்.
Listen News!