தமிழகம் முழுவதும் 7,564 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்று வாக்கேந்திரங்கள் சரிவர இயங்குகின்றனவா என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வெள்ளை நிற கோட் அணிந்து அவர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.
காலை 6 மணி முதலே அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூடியிருந்ததால், காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.

கூடியிருந்த கூட்டம் பாதுகாப்பை மீறி உள்ளே புகுந்து கோஷம் எழுப்பியதால் சிறு குழப்பம் ஏற்பட்டது. எனினும் தேர்தல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு 4 நிமிடங்கள் முன்னதாகவே அஜித் வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார்.
தமிழகத்தில் முதல் ஆளாக வாக்களித்த பெருமையை அஜித் பெற்றார்.
இதேபோல் நடிகர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூ ஆகியோரும் மந்தைவெளி வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.
Listen News!