தமிழக அரசு திரைப்பட விருதுகளை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என்ற கேள்வியை இயக்குநர் பா. ரஞ்சித் எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்து, திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் நடித்த ஆர்யா மற்றும் பசுபதி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் எழுப்பிய இந்த கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனக்கு நெருக்கமான படக்குழு உறுப்பினர்களுக்கு விருதுகள் கிடைத்த நிலையிலும், விருதுகள் வழங்கப்படும் நடைமுறையின் நியாயத்தன்மை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பா. ரஞ்சித் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி. தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா.? என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தனது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பதிவில் கூறியதாவத, “2014 முதல் 2022ம் ஆண்டு வரையிலான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் ‘மாநாடு’ திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த எடிட்டருக்கான விருது – @Cinemainmygenes, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது – @Richardmnathan இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், பா. ரஞ்சித் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோரின் கருத்துகள், விருதுகள் வழங்கும் முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் குறித்து திரையுலகில் மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!