• May 19 2024

25 வருடம் ஆகியும் அந்த படத்திற்கு இன்னும் செட்டில்மெண்ட் வரவில்லை- கடும் கவலையில் இருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பலவற்றில் 80மற்றும் 90களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் தான் ராஜராஜன் என்கிற பாண்டியன். இவர் ராஜாதி ராஜா, மெல்ல திறந்தது கதவு, நான் பாடும் பாடல், அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் பிரபல சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்டு பேசியதாவது நான் வாகினி ஸ்டூடியாவில் கேமரா உதவியாளராக சென்று இருந்தேன். மிகப்பெரிய கேமராமேன் - ஜாம்பவான் பாலு மகேந்திரா படங்களில் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தனியாக ஒளிப்பதிவாளராக படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் பண விஷயத்தில் பெரிதாக டிமாண்ட் செய்ய மாட்டேன்.

எனக்கு பணம் பெற தெரியாது என்று எங்கள் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அடிக்கடி சொல்வார். அது அப்படி அல்ல. நான் உழைக்கும் உழைப்பு பற்றி தயாரிப்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகு நான் எதற்கு சென்று சம்பளத்தை கேட்டு பெற வேண்டும், நான் என்ன பிச்சையா எடுக்கிறேன் .? செய்த உழைப்புக்கான ஊதியம் தரவேண்டும் என்பது அவர்களுக்கு தான் தெரியவேண்டும்.
இப்போது வரை எனக்கு நான் பணிபுரிந்த எந்த படத்திலும் செட்டில்மெண்ட் கிடைத்ததில்லை.

அட்வான்ஸ் மட்டுமே கொடுத்தார்கள். படம் நன்றாக ஓடினாலும் கூட அதற்கான முறையான முழு ஊதியம் கிடைத்தபாடில்லை. அம்மன் கோயில் கிழக்காலே என்கிற ஒரு படத்துக்கு எனக்கு 15,000 பேசினார்கள். படம் நன்றாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். ஆனால் எனக்கு இன்னும் செட்டில்மெண்ட் வரவில்லை. சினிமாவின் நிலைமை இதுதான். அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள். ஒரு ஸ்டில் போட்டோகிராஃபருக்கு ஒரு விசேஷத்தில் கடைசிவரை பேமெண்ட் கொடுக்க மாட்டார்கள். பாக்கி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அதே நிலைமைதான் சினிமா கேமராமேனுக்கும்.

25 வருடம் சினிமாவில் கண்மூடித்தனமாக இரவு பகலாக உழைத்தேன். சில சமயம் அடிபட்டிருக்கிறது. கேமரா முகத்தில் விழுந்து பல் உடைந்திருக்கிறது. வீட்டுக்கு வருவதே மிக குறைவு. என் பிள்ளைகள் என்னை அந்நியராகவே பார்ப்பார்கள். ராட்சசன் போல் பார்ப்பார்கள். ஏனென்றால் நான் வீட்டில் இருப்பதில்லை. பெரும்பாலான நேரம் சினிமாவில் பரபரப்பாக பொழுதை கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் நாய் மாதிரி வள் வள் என்று விழுவேன். அந்த காலத்தில் நாங்கள் இதுபோன்ற கூகுளில் வரும் பெயர்களுக்கெல்லாம் விரும்பவில்லை. மன நிறைவாக பணி செய்வோம்.

நான் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்களும் தங்கமானவர்கள். விஜயகாந்த் சார் அப்படித்தான், எனக்கு மிகவும் நெருக்கம். நல்ல மனிதர். பிரபு சார் மிகவும் அன்பானவர். ஒரு முறை பாண்டித்துரை என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தலைப்பா கட்டி பிரியாணி நிறுவன ஊழியர்கள் வந்து சமைத்து எங்களுக்கு பிரியாணி கொடுத்தார்கள். அந்த அளவுக்கு அன்பு மிக்கவர் பிரபு சார். அனைவரையும் மச்சான் என்று அழைக்கக்கூடிய பாங்கு அவருடையது. அப்படியான மனிதர்களுடன் பணிபுரிந்த நினைவுகளால் தான் நாங்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறோம்.

இப்போது அந்த காலத்தை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். அதுதான் பொற்காலம். இப்போது இன்னும் நேர்மை குறைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இப்போது எனக்கு எதுவும் வேண்டாம். திரும்பவும் பணிபுரியும் எண்ணம் இல்லை. நான் என் குடும்பத்துடன் மதுரை அலங்காநல்லூரில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. நன்றி!” என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement