தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் விரிவாக உரையாற்றினார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் மீண்டும் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

வாக்கெடுப்பு செயல்முறையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சட்டசபை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவாக உறுப்பினர்கள் எழுந்து நின்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல் பிரிவில் 30 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இரண்டாவது பிரிவில் 42 எம்.எல்.ஏ.க்களும், மூன்றாவது பிரிவில் 46 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நான்காவது பிரிவில் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளிலும் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மொத்தமாக 144 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடரும் நிலை உறுதியாகியுள்ளது. வாக்கெடுப்பு முடிவுகள் குறித்த தகவல் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விரைவில் அறிவிக்க உள்ளார்.
Listen News!