தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது முதல் நாளிலேயே மக்கள் நலனை மையப்படுத்திய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார். பதவியேற்ற உடனேயே அவர் கையெழுத்திட்ட மூன்று முக்கிய கோப்புகள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதில், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது, போதைப்பொருள் தடுப்புப்படை அமைப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” உருவாக்குவது ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பான அதிகாரபூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின் படி, இந்த சிறப்பு படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, பெண்கள் மீதான குற்றங்களை தடுப்பது மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்காணிப்பது போன்ற முக்கிய பொறுப்புகளை இந்த படை மேற்கொள்ளவுள்ளது.
ஐ.ஜி. தலைமையில் இயங்கும் இந்த அதிரடிப்படையில் ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக செயல்படத் தொடங்கியிருப்பதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Listen News!