இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் - ஃபான்டஸி நிறைந்த திரைப்படம் தான் கருப்பு. இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ‘பேபி கண்ணன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படம், மே 14ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இத நிலையில், கருப்பு திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி வெளியான டிரைலர், நீதிக்காக போராடும் வழக்கறிஞர்களின் போராட்டக் காட்சியுடன் தொடங்குகிறது.
மேலும், “We Want Justice” என முழக்கமிடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் த்ரிஷா ஒரு வழக்கறிஞராக தோன்றி, ஆர்.ஜே. பாலாஜியின் கதாபாத்திரத்திடம் எச்சரிக்கை விடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, தந்தையுடன் நீதிமன்றத்திற்கு வரும் சிறுமி ஒருவர் தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறார். அந்த வழக்கை எடுத்துக்கொள்ளும் ‘பேபி கண்ணன்’, தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகளை தள்ளிப்போடுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. இதற்கு எதிராக கேள்வி எழுப்பும் தரப்பினரை மிரட்டும் காட்சிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
அதன்பிறகு, சூர்யா ‘கருப்பு’ என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரமாக மாஸ் ஆக களமிறங்குகிறார். அரிவாளுடன் அதிரடி தோற்றத்தில் வரும் சூர்யாவின் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டிரைலரின் இறுதியில், ரசிகர்கள் கூட்டம் முன் நின்று “எல்லாம் நம்ம அன்பான பேன்ஸ்கா..” என அவர் பேசும் வசனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!