ஆதித்ய தார் - ரன்வீர் சிங் கூட்டணியில் வெளியாகியுள்ள 'துரந்தர் 2' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மார்ச் 19ஆம் தேதி வெளியான இந்த படம், அதன் விறுவிறுப்பான கதை அமைப்பு மற்றும் திரைக்காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் இருந்து முதலில் நடிகர் சரத்குமார் படத்தை வெளிப்படையாக பாராட்டினார். அதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குநர் ஷங்கரும் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவொன்றை இட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் 'துரந்தர் 2' படத்தை பாராட்டி பதிவொன்றை வெளியிட்டார். அதில், "என்னா மாதிரியான படம்.. ஆதித்ய தார் உங்களுக்கு சல்யூட். பாக்ஸ் ஆபீஸின் மாஸ்டர். ரன்வீர் சிங் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் துரந்தர் 2.. ஜெய் ஹிந்த்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த படம் சுமார் நான்கு மணி நேரம் கொண்டுள்ளது. ஆனாலும் பார்ப்போருக்கு சலிப்பை தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இதுவரையில் உலக அளவில் 752 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் அரசியல் சார்பு காட்டப்பட்டுள்ளதாகவும், பணமதிப்பிழப்பு போன்ற சர்ச்சைக்குரிய கொள்கை முடிவுகளுக்கு ஆதரவான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தை தடை செய்யக்கோரி முறையீடு செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Listen News!