• Jun 06 2025

"தக் லைஃப்" விவகாரத்தில் திடீர் திருப்பம்..! கமலுடன் சமாதானம் பேசத் தயாராகும் கர்நாடகா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘தக் லைஃப்’ காணப்படுகின்றது. இப்படத்தில் கமல் சிறந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன் அவருடன் இணைந்து சிம்புவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அந்தவகையில் , சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கமல் கதைத்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் வாத, விவாதங்களைத் தூண்டியுள்ளது.


இசை வெளியீட்டு விழாவில் கமல், “தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” எனப் பேசியிருந்தார். ஆனால், அவரது இந்தக் கருத்து, கர்நாடகாவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது. பலர் இது கன்னடம் மற்றும் அதன் மரபை அவமதிப்பது எனக் கருத, கன்னட அமைப்புகள், திரைப்பட வர்த்தக சபை மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கண்டனங்கள் வெளிப்பட்டன.

இந்தக் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கான நிலைக்குப் போனது. வழக்கை விசாரித்த நீதிபதி, “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா? மக்கள் மனத்தை புண்படுத்தும் வகையில் எவரும் பேசக் கூடாது. அவர்கள் கமல்ஹாசனாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி.” என்று கடுமையாகப் பேசினார்கள்.


மேலும் அவர், “300 கோடி செலவில் படம் எடுத்திருந்தாலும், கமல் மன்னிப்பு கேட்கலாமே? கர்நாடகாவில் லாபத்தை நோக்கி படம் வெளியிட விரும்பினால், மன்னிப்புதான் ஒரே தீர்வு.” என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க கமல்ஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

அதில் அவர், “என் கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கன்னட மொழியைத் தாழ்வாக நினைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனது பேச்சில் அவமதிப்பு இருக்க வேண்டிய நோக்கமும் இல்லை.” என்று எழுதியிருந்தார். ஆனால் இந்தக் கடிதத்தில், ‘மன்னிப்பு’ என்ற சொல் இடம்பெறவில்லை என்பதை நீதிபதி தெளிவாகக் கூறினார். இதனால், சர்ச்சை இன்னும் தலைதூக்கியது.


இந்த சூழ்நிலையில், கமலின் சட்டத்தரப்பினர் நீதிமன்றத்தில், இப்படத்தை கர்நாடகாவில் திரையிட ஒருவார கால அவகாசம் தருமாறு கோரினர். படத்தின் ரிலீஸ் திகதியை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நீதிபதி இந்த வழக்கை ஜூன் 10ம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் தற்காலிக பதில்கள் மற்றும் தீர்வுகளை எதிர்பார்க்கலாம் எனவும் அறிவித்தார். வழக்கின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தற்போதைக்கு நேர்மறையான போக்கில் பேசத் தொடங்கியுள்ளது. 


அதன்படி, சபையின் தலைவர் நரசிம்மலு, “கர்நாடகாவிலும் கமல்ஹாசனுக்கு பிரமாண்டமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு, ‘தக் லைஃப்’ படத்தை இங்கு திரையிட விரும்புகிறோம். கமலுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். அவர் விளக்கம் அளித்துவிட்டார். எதிர்வரும் நாட்களில் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்கள், ரசிகர் கூட்டங்கள் மற்றும் திரைப்பட வர்த்தக வட்டாரங்கள் அனைத்தும் இந்த விவகாரத்திற்கான தீர்வை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ‘தக் லைஃப்’ படம் ஒரு பிரமாண்ட ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், இந்த சர்ச்சை சற்றே வியப்பாக இருந்தாலும், மீண்டும் அதனை சரி செய்யும் வாய்ப்பு உள்ளது என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. 


Advertisement

Advertisement