நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக மாறியுள்ளது.
இந்நிலையில், கருப்பு படத்தின் வெற்றிக்கு மத்தியில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படத்தின் எடிட்டர் கலைவாணன் தெரிவித்த சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஆர்.ஜே. பாலாஜி, அந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதனுடன் அவர் வெளியிட்ட பதிவில், “கருப்பு படம் உருவாக காரணமாக இருந்தவருடன் இருக்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவரை இப்போது சந்திப்பது வேற மாதிரியான உணர்வை தருகிறது. அதே அன்பு, அதே அமைதி... எல்லாவற்றுக்கும் நன்றி விஜய் சார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், சில சூர்யா ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கியது சூர்யா தான் என்ற நிலையில், அவரைப் பற்றி குறிப்பிடாமல் வேறு விதமாக பதிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதேபோல், படத்தின் எடிட்டர் கலைவாணன் சமீபத்திய பேட்டியில், “இந்த கதையில் விஜய் சார் நடித்திருந்தாலும் இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கும்” என்று கூறியதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதுவும் சூர்யா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கலைவாணன் விளக்கம் அளித்தார். தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக கூறிய அவர், “சூர்யா ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அந்த வார்த்தைகளை அந்த அர்த்தத்தில் கூறவில்லை. சூர்யா அண்ணனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டவன். இனிமேல் வார்த்தைகளை பயன்படுத்தும்போது அதிக கவனமாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “எல்லாவற்றையும் அன்போடு அணுகுங்கள். நல்ல மனதுடன் இருங்கள். முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது.
இந்த பதிவு, சமீபத்திய சர்ச்சைகளுக்கு சூர்யா மறைமுகமாக பதிலளித்ததாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்து சூர்யா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
ஒருபுறம் சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்தாலும், மறுபுறம் ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!