சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணியில் உருவான அரசியல் கலந்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘அமைதிப்படை’ 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை அதிநவீன 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி சவுண்ட் முறையில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.
அரசியல் சூழல் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில், இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் வகையில் ‘அமைதிப்படை’ மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து கார்த்திக் வெங்கடேசன் கூறுகையில், புரட்சி தமிழன் சத்யராஜின் வாழ்க்கையில் ‘அமைதிப்படை’ ஒரு மைல்கல் படம். அரசியல் ஞானியான மணிவண்ணன் இயக்கிய இப்படம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. Gen Z ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இதை 4K தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப்படை’யில் சத்யராஜ், மணிவண்ணன், சுஜாதா, கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படம், விரைவில் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராக உள்ளது.
Listen News!