சமீபத்தில் Zee தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' சீசன் 4 பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தது. சிறுவர்களின் திறமைக்கு அரங்கேற்றமாக அமைந்த இந்த நிகழ்ச்சி உணர்வு பூர்வமான தருணங்களால் நிறைந்திருந்தது.
இந்த சீசனில் கடைசி வரை பல சிறுவர்கள் இருந்தபோதிலும், திவினேஷ் என்பவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தியை நடுவர்கள் கூறும்போது, திவினேஷின் கண்களில் வியப்பு, சந்தோசம் என அனைத்தும் ஒரே நேரத்தில் காணப்பட்டது.
போட்டியின் பல கட்டங்களிலும் தன்னுடைய இசைத் திறமை மற்றும் பாடல்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் கலை ஆகியவற்றால் நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் தான் திவினேஷ்.
சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட திவினேஷ் பல சுவாரஸ்யமான கருத்துக்களைக் கூறியிருந்தார். அதன்போது, “முதன்முதலில் எனக்கு பாடலை கற்றுக் கொடுத்தது தாத்தா தான். எனக்குத் தாத்தாவை ரொம்ப பிடிக்கும். இந்த சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல பாடல்களைப் பாடி மேலே வரணும்னு தாத்தா தான் சொல்வார்.” என்றார் திவினேஷ்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவுடனே வீட்டில் இருந்த அனைவரும் தன்னைப் பாராட்டியதாகவும் கூறியிருந்தார். திவினேஷ் இந்நிகழ்ச்சியில் வென்றதற்காக 10 லட்சம் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை எப்படி செலவிடப்போகிறீங்கள் என்று நடுவர் கேட்டபோது, திவினேஷ் கூறிய பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
திவினேஷ் “இந்தப் பணத்தை வச்சு தன்னுடைய குடும்பக் கடன்களை அடைக்கப்போகிறேன். இந்தப் பணத்தை வச்சு கடன் அடைக்கணும்னு அம்மா சொன்னது கிடையாது. தினமும் கடனை நினைச்சு அம்மா அழுவாங்க. அதைப் பார்த்த எனக்கு இந்தப் பணத்தை வச்சு கடனை அடைச்சிடணும்னு தோணுச்சு.” என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட ரசிகர்கள் "இந்த சிறுவயதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பதனைப் பாராட்ட வேண்டும்.." எனக் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!