உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா விழாவின் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவர் மோனலிசா. அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட இவர், சமீபத்தில் நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டது மூலம் மேலும் செய்திகளில் இடம்பிடித்தார். இந்த நிலையில், கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை மோனலிசா சில அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பாலிவுட் திரைப்பட இயக்குநர் மனோஜ் மிஸ்ரா என்னிடம் பல முறை தவறாக நடந்து கொண்டார். டேராடூன் மற்றும் நேபாளம் போன்ற இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது, அவர் எனது உடலைத் தொடுவதன் மூலம் பெண்மையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். அந்த நேரத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், என் குடும்பத்தினர் பணத்தை மட்டுமே முக்கியமாகக் கருதியதால், இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.” என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது இந்த சம்பவங்களை மறைக்கவே இயக்குநர் மனோஜ் மிஸ்ரா தன்னை எதிர்த்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மோனலிசாவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரும் விவாதத்தையும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளையும் உருவாக்கி வருகின்றன.
சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த விவகாரம், பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!