மலையாள சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமா வரலாற்றிலேயே திரில்லர் வகை படங்களுக்கு ஒரு புதிய அளவுகோலாக அமைந்த படம் என்றால் அது ‘திரிஷ்யம்’ தான். மோகன்லால் – மீனா இணைந்து நடித்த இந்த படம், 2013ஆம் ஆண்டு வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப உணர்வும், விறுவிறுப்பான திரைக்கதையும் இணைந்த இந்த படம், காலத்தை கடந்த ஒரு கிளாசிக் படமாக மாறியது.

ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம்’, ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் புத்திசாலித்தனம், குடும்பத்தைக் காப்பாற்றும் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை. மோகன்லாலின் இயல்பான நடிப்பும், மீனாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தன. இதன் வெற்றி காரணமாக, இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு தேசிய அளவிலும் கவனம் பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘திரிஷ்யம் 2’ வெளியானது. பலர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த இரண்டாம் பாகமும், கதையின் ஆழம் மற்றும் திரைக்கதை அமைப்பால் ரசிகர்களை ஏமாற்றவில்லை. முதல் பாகத்தில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கதையின் அடுத்த கட்டத்தை விறுவிறுப்பாக எடுத்துச் சென்ற விதமும் பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில், ‘திரிஷ்யம்’ தொடரின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘திரிஷ்யம் 3’ அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் ஒரு முக்கிய கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. அது, “திரிஷ்யம் 4 உருவாகுமா?” என்பதே. இந்த நிலையில், இயக்குநர் ஜித்து ஜோசப் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், நான்காம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் தெளிவான பதிலை அளித்துள்ளார்.
அதில்,“மூன்றாம் பாகத்திற்குப் பிறகு கதையைத் தொடரும் எண்ணம் இல்லை. இதற்கு மேல் கதையை நீட்டித்தால் அதன் விறுவிறுப்பு குறைந்துவிடும். ஒரு கதைக்கு சரியான முடிவு அவசியம். அதனால், மூன்றாம் பாகத்துடன் ‘திரிஷ்யம்’ கதையை முடிக்க முடிவு செய்துள்ளேன்.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Listen News!