தமிழ்நாட்டின் பெருமையும், இந்திய இசை உலகின் அடையாளமுமான இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற சிம்பொனி இசையமைப்பாளராக உயர்ந்து, எண்ணற்ற சாதனைகளைப் படைத்து இசை உலகின் மகுடமாக திகழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தனது இசையின் மூலம் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்து வரும் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் மொழியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “தமிழர்களின் பெருமையாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு எங்களின் அன்பும் மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இசை உலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனித்துவமான தடம் பதித்து வரும் இளையராஜாவின் 83வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!