பிக்பாஸ் சீசன் 6ஆனது ஆரம்பமாகி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இடம்பெற்று வருகின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் பிக்பாஸ் வீடும் கோபம், சண்டை, அழுகை, சிரிப்பு என உணர்ச்சிகள் நிறைந்த ஒன்றாக மாறி உள்ளது.
இவ் 21 போட்டியாளர்களிலும் முக்கியமான மற்றும் முதன்மையான ஒருவராக இருப்பவர் ஜிபி முத்து. நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து இவர் செய்து வருகின்ற செயல்பாடுகள் யாவும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அதாவது பிக்பாஸ் ரசிகர்களை மட்டுமில்லாமல் சக போட்டியாளர்களையும் இவர் வெகுவாக கவர்ந்துள்ளார். இவரின் வெகுளித்தனம் நிறைந்த வெள்ளந்தியான பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளால் கவரப்பட்ட ரசிகர்கள், அவருக்காக ஆர்மியை உருவாக்கி உள்ளனர்.
இந்த சீசனின் ரசிகர்களின் பிரதானமான போட்டியாளராக இவர் இருந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறி வருகிறார்.
அதாவது தன்னுடைய குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பார்க்காமல் தனக்கு மூச்சு முட்டுவதாகவும் தன்னால் சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை என்றும் இவர் கேமரா முன்னாடி கதறி அழுதார். பிக்பாஸிடமும் இதைக் கூறி முறையிட்டார்.
ஆனால் பிக்பாஸ், அவர் நன்றாக விளையாடி வருவதாவும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் அவரது குறையை கூறி ஆறுதல் அடையுமாறும் பிக்பாஸ் கூறி இருந்தார். ஆனால் அதையும் ஜிபி முத்து ஏற்கவில்லை. தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அதற்கு தக்க நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறும் தொடர்ந்தும் அழுது கொண்டே வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் தீபாவளி தினத்தையொட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர் ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ் தரவுள்ளதாக தற்போது ஒரு செய்தி கசிந்து வருகின்றது. அதாவது இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நாள் முதலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதற்கு ஜிபி முத்து முக்கியமான ஒரு காரணமாக உள்ளார்.
அவ்வாறான ஒரு நபர் நிகழ்ச்சியின் இடையில் வெளியேறுவதை விஜய் டிவி விரும்பவில்லை. இதையடுத்தே அவர் அவரது குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் தன்னுடைய மனதில் குடும்பத்தினர் குறித்த ஏக்கம் இருந்தாலும் தொடர்ந்து நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் விதமாக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் ஜிபி முத்து.
இதனிடையே ஜிபி முத்து அவரது குடும்பத்தினரை பார்த்துவிட்டால், அவரது உற்சாகம் சிறப்பாக அமையும் என்றும் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனது குழந்தைகளை பார்க்கவே அவர் அதிகமான ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர்களை பார்த்து விட்டால் ஜிபி முத்து 100 நாட்கள் வரையும் நிகழ்ச்சியைத் தாக்குப்பிடிப்பார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
Listen News!