நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 4-ம் தேதி இரவு நடைபெற்ற சிறப்புக் காட்சியை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் தேஜ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதுடன், திரையரங்க நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் குற்றவாளிகளாக பட்டியலிடப்பட்டனர். நடிகரின் மேலாளர் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. தற்போது நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மன் காரணமாக, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!