தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்த நடிகர் ரவி மோகன், இப்போது தயாரிப்பாளராக புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளார்.
"ரவி மோகன் ஸ்டூடியோஸ்" என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன், அதன் அறிமுக விழாவை இன்று சென்னையில் வெகுவிமரிசையாக மேற்கொண்டுள்ளார்.
இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஜெனிலியா, யோகி பாபு, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்களின் வருகையால் ரவி மோகனின் இந்த புதிய முயற்சிக்கு திரைப்படத் துறையின் முழுமையான ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது.
விழாவில் தனது திட்டங்களை அறிவித்த ரவி மோகன், “முழு ஈடுபாட்டுடன் தயாரிப்பாளராகவும், நடிக்கவும் விரும்புகிறேன். சினிமா எனது உயிர் போன்றது. ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்பதற்குப் பதிலாக, என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாகவே அந்த கதைகளை உருவாக்கப் போகிறேன்,” என்று தெரிவித்தார்.
அதன்படி, தொடக்கத்திலேயே இரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தார். அதற்கேற்ப, இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, யோகி பாபு நடிப்பில் ‘ஆன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) என்ற படத்தை இயக்குகிறார் ரவி மோகன்.
"படத்தின் முதல் கட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டன. புரொமோ ஷூட் (promo shoot) முடிந்து விட்டது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும்." எனவும் ரவிமோகன் அந்நிகழ்வில் கூறியுள்ளார்.
Listen News!