பிரபல நடிகரான அஜித்குமார் தற்போது கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் அவருடைய சில படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிலுவையில் உள்ளன. சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அதே அளவிற்கு கார் ரேசிங்கிற்கும் அஜித் குமார் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
அந்த வகையில், ஒரு ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கார் ரேசிங்கிற்கும், அடுத்த ஆறு மாதங்களை திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் ஒதுக்கி செயல்பட்டு வருகிறார். அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இத்தாலியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இதில் அஜித்குமார் வெற்றி பெற வேண்டும் என்று அவரது நண்பர் கார்த்திகேயன், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளதோடு, ருத்ராட்ச மாலை வழங்குவதாகவும் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படியே ருத்ராட்ச மாலை பெற்றுக்கொண்டு லிங்க வழிபாடு செய்வதற்காக நடிகர் அஜித்குமார் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். புகைப்படம் எடுக்க ஆவலுடன் சென்ற ரசிகர்களை பாதுகாவலர்கள் அமைதிப்படுத்தி, அஜித்குமாரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Listen News!