விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி, ரிலீசுக்கு தயாராக உள்ள படம் தான் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதால், இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஹைதராபாத்தில் படக்குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இதன் போது, ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், தன்னுக்கு தெலுங்கு தெரியாததால் மொழிபெயர்ப்பாளரை நியமித்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பாளர், பிரதீப் கூறியவற்றை மொழிபெயர்த்ததோடு, சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

ஆனால், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பிரமோஷனில், அவர் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். மொழிபெயர்ப்பாளரை நியமிப்பதற்குப் பதிலாக, ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தாம் ஆங்கிலத்தில் கூறியவற்றை நேரடியாக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு குறித்து தனது கவலைகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், “இன்றைய காலத்தில், இணையத்தில் ஏஐ மூலம் மாற்றப்பட்ட படங்கள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்கள் கூட இவ்வாறு மாற்றப்படுகின்றன. இது செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியை காட்டுகிறது.
நாம் உண்மையிலிருந்து மெதுவாக விலகிச் செல்கிறோம். இனி எதையும் முழுமையாக நம்ப முடியாத நிலை உருவாகலாம். ஒரு நாள் நாய் ஒன்று மனிதனை காப்பாற்றுவது போல காணப்படும் வீடியோ கூட ஏஐயால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.. எனவே ஏஐயால் எதிர்காலத்தில் நிலைமை எப்படியாக இருக்கும் என்ற எண்ணமே எனக்கு கவலை அளிக்கிறது” என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Listen News!