நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் தனித்த பாதையை தேர்வு செய்துள்ள அவர், தாம் தயாரித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், அதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்ததாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அந்த படங்கள் அனைத்தும் தனது மனதிற்கு நெருக்கமானவை என்பதால் எந்த வருத்தமும் இல்லை என்று அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், புதிய முயற்சிகளையும் தேர்வு செய்து வந்தவர். அதேபோல் தயாரிப்பாளராகவும் அவர் வழக்கமான சினிமா சூத்திரங்களை விட, உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகளை முன்னிறுத்த முயன்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அதாவது, " நான் தயாரித்த பெரும்பாலான படங்கள் எனக்கு நஷ்டமாகவே முடிந்துள்ளன. என் தயாரிப்பில் சங்கு தேவன் என்ற படத்தை எடுத்தோம். ஆனால் அந்த படம் வெளியீடு ஆகாமல் நிறுத்தப்பட்டதால் சுமார் 1.75 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு நான் தயாரித்த ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜுங்கா லாபம் ஆகிய படங்களும் வர்த்தக ரீதியாக நஷ்டமாகவே முடிந்தன. இருப்பினும், அந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை என்பதால் எந்த வருத்தமும் இல்லை. தற்போது காட்டான் என்ற தொடரை நான் தயாரித்துள்ளேன். இந்த தொடருக்கான நிதியை Disney+ Hotstar வழங்கியுள்ளது." என்றார் விஜய் சேதுபதி.
மேலும், விஜய் சேதுபதி தயாரித்துள்ள “காட்டான்” தொடர் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது என்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் வெற்றி, தோல்வி ஆகியவை மாறிமாறி வரும். ஆனால் தோல்விகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து புதிய படைப்புகளை உருவாக்க முனைவதே ஒரு கலைஞனின் உண்மையான பலம்.
அந்த வகையில் விஜய் சேதுபதி மீண்டும் தன்னுடைய தயாரிப்பு முயற்சியின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். “காட்டான்” தொடர் அவரது அடுத்த முக்கியமான தயாரிப்பாக உருவாகி வரும் நிலையில், அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பது தற்போது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
Listen News!