சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடியிலும் அதே அளவிலான ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, படம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்தது. குறிப்பாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து ரசிகர்கள் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினர்.

இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “கருப்பு படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முழுமையான தரத்தை வழங்க 8 முதல் 10 மாதங்கள் வரை பணிகள் தேவைப்பட்டது. ஆனால் நிதி மற்றும் காலக்கெடு தொடர்பான சிக்கல்களால் சில இடங்களில் தரத்தில் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காட்சிகள் கதைக்கு முக்கியமானவை என்பதால் அவற்றை நீக்கவும் முடியவில்லை.” என்றார்.
மேலும், “திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டமாக படம் பார்க்கும்போது சில குறைகள் பெரிதாக தெரியாது. ஆனால் ஓடிடியில் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் உற்று நோக்குவதால் அந்த குறைகள் வெளிப்படுகின்றன. ரசிகர்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானதே. உண்மையில் அவர்கள் கண்டதை விட அதிகமான கிராபிக்ஸ் குறைகள் எனக்கு முன்பே தெரியும்.
ஓடிடி ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க முடியாததற்கு வருந்துகிறேன். அடுத்த முறை இன்னும் சிறந்த படைப்பை கொடுக்க முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த நேர்மையான ஒப்புதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!