'கெணத்த காணோம்' திரைப்படம் மார்ச் 13, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நகைச்சுவை நடிகராக அறியப்படும் யோகி பாபு, இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதால், படம் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். அவர் உயிருடன் இல்லாத நிலையில் படம் வெளியானது, படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியுடன் தொடர்புடையதாக தற்போது யோகி பாபு பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அவர் கூறுகையில், “இந்தத் தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு விதமான துயரத்தையும் தருகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் இருப்பது என்னை வேதனைப்படுத்துகிறது. ஆனால், அவரின் நோக்கம் ‘கெணத்த காணோம்’ படத்தில் என்றென்றும் உயிருடன் இருக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி,” என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தை உருவாக்கிய படக்குழுவிற்கும், தொடர்ந்து ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். “இந்த வெற்றி, நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் செல்ல என்னை ஊக்குவித்துள்ளது. இனியும் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள திரைப்படங்களை வழங்க உற்சாகமாக உள்ளேன்,” என்றும் யோகி பாபு கூறியுள்ளார்.
Listen News!