தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விஜய். அவர் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்து, அங்கிருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு விஜய் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெயிலில் மயங்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இன்று நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் விஜய். அதற்காக சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த சந்திப்பில் கிட்டத்தட்ட 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கூட்டத்திற்கு பொதுமக்கள் திரள்வதை தவிர்த்து, நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ஆர்வத்தில் தொண்டர்களும் ரசிகர்களும் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!