தெலுங்கு திரையுலகின் பிரபல ஜோடியாக பேசப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் திருமணம் (பிப்ரவரி 26) ராஜஸ்தானில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நீண்டநாளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்த இணைவு, தற்போது அதிகாரபூர்வமாக நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானின் பாரம்பரிய சூழலில் நடைபெற்ற திருமண விழா மிகவும் பிரமாண்டமாக நடந்ததாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வருகிற மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த வரவேற்பு விழாவில் திரையுலக பிரபலங்கள், அரசியல் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியைச் சுற்றி ஒரு முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஹைதராபாத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள QR Code கொண்ட அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களும், விருந்தினர்களின் தனியுரிமையும் கருத்தில் கொண்டு இந்த டிஜிட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
QR Code முறையை பயன்படுத்துவது தற்போது பிரபலங்களின் திருமணங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணத்திலும் இதேபோன்ற QR Code அடிப்படையிலான அனுமதி நடைமுறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Listen News!