தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், தற்போது இயக்குநர் சசியுடன் மீண்டும் இணைந்து “நூறு சாமி” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்” பாடலின் தாக்கத்தையே மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த புதிய படத்திற்கு அதே உணர்வை பிரதிபலிக்கும் வகையில் “நூறு சாமி” என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கிராமத்து பின்னணியில் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, “நூறு சாமி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தனக்கு கிராம வாழ்க்கை மிகவும் பிடிக்கும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு நல்ல கிராமத்திற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே மேம்பட்டது எனவும், நகரங்களில் பெரும்பாலானோர் மனஅழுத்தத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் திரைப்படத் துறையில் சம்பள கட்டுப்பாடு குறித்து பேசுகையில், தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்த விகிதாச்சார அடிப்படையிலான சம்பள முறை நல்ல முன்னேற்றம் என பாராட்டிய விஜய் ஆண்டனி, அந்த முறையில் சம்பளம் பெற்ற முதல் கதாநாயகன் தானாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!