தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 10 குழந்தைகளும் அடங்குகின்றனர். வைத்தியசாலையில் குழந்தைகளின் உடலைக் கண்டு அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் இணையத்தில் பார்ப்போரின் மனதை கண்கலங்கச் செய்துள்ளன.
மேலும் இந்த நெரிசலில் சிக்கி சுமார் 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் போது உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதல்வர் மு. க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க தனி விசாரணை ஆணையத்தையும் தமிழ்நாட்டு அரசு அமைத்துள்ளது.
விஜய் வர காலதாமதம் ஆனதால் பரப்புரை நடந்த பகுதியில் கூட்டம் அதிக அளவில் கூடியுள்ளது. இதனாலையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொறுப்பான டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
இறுதியில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும், இதனால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் விஜய் நேரில் சென்று சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விஜய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!